search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொங்கும் மின்வேலி"

    தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் காட்டு யானைகள் புகுவதை தடுக்க தொங்கும் மின்வேலி அமைக்கப்பட்டது.
    மசினகுடி:

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம், அதன் வெளிமண்டல பகுதிகள் மற்றும் கூடலூர் பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து அட்டகாசம் செய்து வருகிறது. அவ்வாறு வரும் காட்டு யானைகள் தொழிலாளர்களின் வீடுகளை சேதப் படுத்துவதோடு, விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை தின்றும், மிதித்தும் நாசப்படுத்தி வருகிறது.

    இதனை கட்டுப்படுத்த வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதனை தொடர்ந்து காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்து ஊருக்குள் புகுவதை தடுக்க குடியிருப்பு பகுதிகளை சுற்றிலும் சூரிய மின்வேலி அமைக்கப்பட்டது. அதேபோல் வனப்பகுதிகளின் எல்லையில் அகழிகளும் தோண்டப்பட்டு உள்ளன. ஆனால், காட்டு யானைகள் சூரிய மின்வேலிகளையும், அகழிகளையும் கடந்து தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

    இதனால் காட்டு யானைகளை கட்டுப்படுத்துவது வனத்துறையினருக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. இதையடுத்து யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுவதை முழுவதுமாக கட்டுப்படுத்த தொங்கும் மின்வேலிகளை வனத்துறையினர் அமைக்கும் நடவடிக்கையில் தற்போது ஈடுபட்டு உள்ளனர். முதல் கட்டமாக முதுமலை புலிகள் காப்பகத்தில் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமை சுற்றி தொங்கும் மின்வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக காட்டு யானைகள் வளர்ப்பு யானைகள் முகாம் பகுதிக்குள் புகுவதை தடுப்பதற்காக இந்த வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

    சீரான இடைவெளியில் இரும்பு கம்பங்கள் நடப்பட்டு, அவற்றின் குறுக்கே கம்பிகள் கட்டப்பட்டு உள்ளன. அந்த இரும்பு கம்பங்களை காட்டு யானைகள் சேதப்படுத்தி விட்டு உள்ளே நுழையாமல் இருப்பதற்காக, இரும்பு கம்பங்களின் மேல்பகுதியில் இருந்து ஏராளமான கம்பிகள் கீழ்நோக்கி தொங்க விடப்பட்டு உள்ளது. இந்த கம்பிகளில் இரவு நேரங்களில் குறைந்த திறன் கொண்ட மின்சாரம் செலுத்தப்படும். அந்த சமயங்களில் காட்டு யானைகள் வேலியை சேதப்படுத்தி விட்டு, உள்ளே வர முயன்றால் தொங்க விடப்பட்டு உள்ள கம்பிகளில் பாய்ந்து கொண்டு இருக்கும் மின்சாரம் தாக்குவதால் காட்டு யானைகள் திரும்பி வனப்பகுதிக்குள் செல்லும். வேலியில் செலுத்தப்படும் மின்சாரம் குறைந்த திறன் கொண்ட மின்சாரம் என்பதால், காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.

    தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள இந்த திட்டம் விரைவில் முதுமலை புலிகள் காப்பகத்தின் அனைத்து பகுதிகளிலும் செயல்படுத்தப்பட உள்ளது. 
    ×